மத்திய மற்றும் தென் சீனாவில் கடந்த ஒரு வாரமாக பெய்து வரும் கன மழையினால் கடுமையான வெள்ளப்பெருக்கு ஏற்பட்டுள்ளது.
சீனாவின் வூஹான் நகரம் வெகுவாகப் பாதிக்கப்பட்டுள்ளது. சுமார் 80 இலட்சம் பேர் வசிக்கும் இப்பகுதியில் வீடுகள் பல வெள்ள நீரில் மூழ்கியுள்ள நிலையில், 181 பேரைக் காணவில்லை என அறிவிக்கப்பட்டுள்ளது.
இவர்கள் நீரில் மூழ்கி இறந்தனரா, இல்லை எங்காவது சிக்கிக் கொண்டுள்ளனரா எனத் தெரியவில்லை.
சீனாவின் வூவாந் நகரத்தின் யாங்சே ஆற்றங்கரையில் கடந்த ஒரே வாரத்தில் 57.4 சென்டிமீட்டர் மழை பெய்துள்ளதாக சீன வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது.
வௌ்ளத்தில் சிக்கி 14 பேர் உயிரிழந்துள்ளதாக உள்ளூர் தொலைக்காட்சியில் தெரிவிக்கப்பட்டுள்ளது.
கிட்டத்தட்ட 170,000 பேர் தங்களது குடியிருப்பைவிட்டு இடம்பெயர்ந்துள்ளனர். 80,000க்கு அதிகமான மக்கள் முகாம்களில் தங்க வைக்கப்பட்டுள்ளனர்.
வரலாறு காணாத வெள்ளத்தால் சீனாவின் முக்கிய நகரங்கள், கிராமங்கள் பாதிக்கப்பட்டுள்ளன. வெள்ளத்தினால் பெரும்பாலான பகுதிகளில் போக்குவரத்தும் துண்டிக்கப்பட்டுள்ளது.