(ஏ.எச்.ஏ. ஹுஸைன்)
கிழக்கு மாகாணத்திலும் படையினர் கையகப்படுத்தி நிலைகொண்டுள்ள பொதுமக்களின் காணிகள் விடுவிக்கப்பட வேண்டும் என கிழக்கு மாகாண சபையைப் பிரதிநிதித்துவப்படுத்தும் தமிழ் முஸ்லிம் உறுப்பினர்கள் பிரதம மந்திரி ரணில் விக்கிரமசிங்ஹவிடம் கூட்டாக வேண்டுகோள் விடுத்துள்ளனர்.
வடக்கில் படையினர் நிலை கொண்டுள்ள தனியார் காணிகள் விடுவிக்கப்பட்டு உரிமையாளர்களிடம் மீளக் கையளிக்கப்படுவது போன்று கிழக்கு மாகாணத்தில் படையினர் கையகப் படுத்தியுள்ள பொதுமக்களின் காணிகள் விடுவிக்கப்பட வேண்டும் என அவர்கள் வலியுறுத்தியுள்ளனர்.
வெள்ளிக்கிழமை 10.06.2016 கிழக்கு மாகாணத்திற்கு வருகை தந்திருந்த ரணில் விக்கிரமசிங்ஹவிடம் இந்த வேண்டுகோள் முன்வைக்கப்பட்டுள்ளது.
பிரதமர் ரணில் விக்கிரமசிங்ஹ, மாகாண சபை உறுப்பினர்கள் மற்றும் அதிகாரிகள் மத்தியில் அபிவிருத்தி தொடர்பாக கலந்துரையாடும்போது இந்த வேண்டுகோள் கிழக்கு மாகாண தமிழ் முஸ்லிம் உறுப்பினர்களால் கூட்டாக முன்வைக்கப்பட்டதாக தமிழ் தேசிய கூட்டமைப்பு உறுப்பினரான ஞானமுத்து கிருஷ்ணபிள்ளை தெரிவித்தார்.
இந்த வேண்டுகோளுக்கு பதில் அளித்த பிரதம மந்திரி ரணில் விக்கிரமசிங்ஹ வடக்கில் மக்களின் காணிகளை படையினரின் பாவினையிலிருந்து தான் விடுவித்துக் கொடுத்தது போன்று கிழக்கிலும் பொதுமக்களின் காணிகள் விடுவிக்கப்படும் என உறுதியளித்தார்.
கிழக்கு மாகாணத்தில் தனியாருக்கு சொந்தமான காணிகளிலும் கட்டிடங்களிலும் பொலிஸ் மற்றும் இராணுவம் தொடர்ந்தும் நிலை கொண்டிருப்பதாகவும் போர் முடிந்து 7 ஆண்டுகள் கடந்து விட்ட போதிலும் கிழக்கு மாகாணத்தில் காணிப் பிரச்சினை இன்னமும் முடிவுக்கு கொண்டு வரப்படவில்லை. படையினரின் தனியார் காணி மீதான ஆக்கிரமிப்பு தொடர்கின்றது.
குறிப்பாக புல்மோட்டை பிரதேசத்தில் கடற்படை மற்றும் இராணுவம் நிலை கொண்டுள்ள தனியார் காணிகள் விடுவிக்கப்பட வேண்டும் என்ற வேண்டுகோளை ஸ்ரீலங்கா முஸ்லிம் காங்கிரஸ் உறுப்பினரான முஹம்மத் ரம்ழான் அன்வர் இந்த சந்திப்பில் பிரதமரிடம் சுட்டிக் காட்டியுள்ளார்.
பிரதம மந்திரியுடனான இந்த சந்திப்பு தொடர்பாக கிழக்கு மாகாண சபை உறுப்பினரான முஹம்மத் ரம்ழான் அன்வர் மேலும் தெரிவிக்கையில்,
தற்போது இந்த காணி விடுவிப்பு விடயத்திற்குப் பொறுப்பாகவுள்ள அமைச்சர் சரத் பொன்சேகா, மாகாண முதலமைச்சர், ஆளுனர் மற்றும் பாதுகாப்பு அமைச்சு செயலாளர் ஆகியோர் கொண்ட குழு மூலம் இந்த பிரச்சினைக்குரிய தீர்வை பெற்று தரப்படும் என பிரதமரால் பதில் வழங்கப்பட்டது.
வட மாகாணத்தில் படையினர் நிலை கொண்டுள்ள தனியார் காணிகளை விடுவிப்பது தொடர்பில் பாரிய சவால்கள் இருந்த போதிலும் அவை சிறிது சிறிதாக விடுவிக்கப்பட்டு பொது மக்களிடம் மீள கையளிக்கப்பட்டு வருகின்றன. இந்நிலையில் கிழக்கு மாகாணத்திலுள்ள காணி விடுவிப்பது தொடர்பாக பிரதமரின் பதிலில் நம்பிக்கை வைக்க முடியும் என்றார்